.

.

Wednesday, September 28, 2016

வைகுண்டர் - வள்ளலார் ஒரு பார்வை - ஒப்பாய்வு நூல் - ஒன்று முதல் மூன்றாம் அத்தியாயங்கள் வரை

                                         

                               அறிமுகம்  ( முதல் அத்தியாயம் ) 


    அகிலத்தை அன்பால் ஒன்றிணைக்கப் பண்பட்ட பூமியாம் பாரத தேசத்தில் அவதரித்த ஞானியர் பலர். உலக நாடுகளை மேற்கத்திய நாடுகள், கிழக்கத்திய நாடுகள் என இரண்டாகப் பிரித்தால் மேற்கு, அறிவியலில் முன்னேற்றம் அடைந்தவையாகவும், கிழக்கு ஆன்மீகத்தின் ஆதார சுருதியாகவும் இருப்பது உண்மை. மேற்கே வெளித்தேடலில், புறத்தில் தேடிக்கொண்டிருக்கின்ற வேளை விஞ்ஞான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக்கொண்டிருந்த வேளை, கிழக்கு உள் தேடலில் அகத்தேடலில் மெய்ஞானத்தில் நாட்டம் கொண்ட ஞானிகள் பலரைத்தந்த பூமியாக உள்ளது.           


       பாரத தேசத்தில் எவ்வளவோ சித்தர்கள், ஞானிகள், மகான்கள், ரிஷிகள் அவதரித்து மக்களுக்கு நல்வழிகாட்டியுள்ளனர். பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாரதத்தில் தோன்றிய சீர்திருத்தவாதிகளில் முக்கியமானோர் பலர்.   1774  ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் தோன்றிய ராஜாராம்மோகன்ராய் மிக முக்கியமான சமுதாய சீர்திருத்தவாதி. இவருக்கு பன்மொழி ஞானம் உண்டு. தாய் மொழி வங்கமாக இருப்பினும் சமஸ்கிருதம், ஆங்கிலம், கிரேக்கம், ஹீப்ரூ, பாரசீகம், அரபு என்று பல மொழிகளைப் பயின்றவர். வேதங்கள் உபநிடதங்கள், சாத்திரங்களிலும் ஞானம் உள்ளவர். இவர் தான் கணவர் இறந்தால் அவர்களின் மனைவியையும் சேர்த்து சிதையில் தள்ளி எரிக்கும் கொடிய வழக்கை எதிர்த்துப்போராடி வெற்றிகண்டவர்.  பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் . 

      அடுத்துச்  சொல்லவேண்டுமெனில் வடக்கே 1896இல் இராமகிருஷ்  பரமஹம்சர். கல்கத்தாவில் உள்ள ஒரு காளி கோவிலில் பூசாரியாக இருந்து பின்பு மெய்ஞானியாக பரிணமித்து தனக்குப் பிறகு ஒரு வீரமும் விவேகமும் மிக்க துறவியாக சுவாமி விவேகானந்தரை உலகுக்கு அடையாளம் காட்டியவர்.  

       1823 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தவப்பயனாக அவதரித்தவர் வடலூர் வள்ளற்பெருமான். இவர் பிறந்ததற்கு ஓராண்டிற்குப் பிறகு 1824 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பிறந்த சீர்திருத்தவாதி சுவாமி தயாநந்த சரஸ்வதி, ஆரிய சமாஜத்தை நிறுவியவர். இவருக்கு குஜராத்தியைத்தவிர இந்தி, சமஸ்கிருதத்தில் புலமை உண்டு. மேற்கூறிய நால்வர் தோன்றிய காலக்கட்டத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கோடியில் உதித்த அவதரித்த மகான் அய்யா வைகுண்டர். வைகுண்டர், வள்ளலாருக்குப் பின்பு கேரளத்தில் உதித்த மிகப்பெரிய சீர்திருத்தவாதி நாராயணகுரு. மேற்கூறிய ஞானிகளில் அய்யா வைகுண்டரையும் வள்ளலாரையும் ஒப்பிட்டு இந்நூலில் பார்க்க இருக்கிறோம்        

      பரந்து விரிந்த பாரதத்தில் தென் முனையில் சாணார் என்று அழைக்கப்படும் நாடார் குலத்தில் தோன்றிய ஆன்மீக ஒளி அய்யா வைகுண்டர். அன்பு வழியில் மானுடகுலத்தை ஒருங்கே இணைத்து, சமுதாய ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, ஒரு குலத்திற்கு ஒரு நீதி என்ற நிலையை மாற்ற உண்மையாக உழைத்தவர் வைகுண்டர். வரலாற்றில் வைகுண்டரின் வரவு ஒரு அவதாரமாகவே பார்க்கப்படுகிறது . அவதாரம்  எனப்படுவது இம்மண்ணில் கொடுமைகள் கோலோச்சும் வேளை இறைவனே மனித உருவில் பிறப்பெடுத்து அக்கொடுமைகளை களைந்துவிட்டுச் செல்வது. மனிதரைப்போல் மண்ணில் பிறந்து செயற்கரிய செயல்களை செய்து முடித்து, நீதியையும், அறநெறியையும் நிலைநாட்டி, அரக்கர்களை கொன்றுகுவித்து மக்கள் மனதில் தெய்வமாக வாழ்வது அவதாரத்தின் நோக்கமாகும்       

               
     வைணவ உலகில் விஷ்ணு எனப்படும் திருமால் பத்து அவதாரங்கள் எடுத்து அவனியைக் காத்ததாக, அறநெறியை போதித்ததாகக் கருதப்படுகிறது. கலியுகத்தின் கல்கி அவதாரம் வரை பத்து அவதாரங்களாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுகிறது. 

  திருமாலின் மற்றொரு அவதாரமாகவே மானுடகுலத்தில் உதித்த முத்துக்குட்டி என்னும் வைகுண்டர் கருதப்படுவது அவருடைய வரலாற்றின் மூலமாக அறியவருகிறது. ஆத்திகவாதிகள் இதுபோன்று செயற்கரிய செயல்களைச் செய்து முடிப்போரை அவதாரம் என்றால் பகுத்தறிவாளர்கள் மற்றும் நாத்திகவாதிகள் அவர்களை சமுதாயப் புரட்சியாளர்களாகக் கருதுவர். அப்படியே ஒரு பக்கம் அவதாரமாக, இன்னொருபக்கம் சமுதாயப்புரட்சி புயலாக அய்யா வைகுண்டரின் வருகை நடந்தேறியிருக்கிறது எனலாம்.                      
   " தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் " என்கிற புதியதொரு முழக்கத்தைப் புவியில் ,முழக்கமிட்ட வைகுண்டர் தர்மத்தை காக்க வந்த தயாநிதியாக, அதர்மத்தை எதிர்த்து அதன் ஆணிவேரை அசைத்துப் பிடுங்கி வீசிய புரட்சிப்பூகம்பமாக விளங்குகிறார்.

      இவரது வருகையால் இருட்டின் பள்ளத்தாக்குகளில் ஜாதிக்கொடுமையால் வாடிக்கிடந்த மக்களுக்கு வெளிச்ச சிகரத்தைப் பார்த்து வெளியேறி சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் உரிமை கிடைத்தது. தனி மனிதர்களின் மனமாற்றங்களே சமுதாயத்தின் மாற்றம் என்கின்றனர் அறிஞர்கள். அப்படியே மக்கள் மனங்களில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்து சமுதாயத்தில் மாற்றத்தை நிகழ்த்திக்காட்டிய வைகுண்டர் தமிழ்நாட்டின் முதல் சமுதாய சீர்திருத்தவாதி எனில் தவறில்லை.

      " நெஞ்சுப்பொறுக்குதில்லையே இந்த நிலைக்கெட்ட மனிதரை நினைத்து விட்டால் கஞ்சி குடிப்பதற்கு இல்லார் அதன் காரணம் இவை என்று அறியும் அறிவுமில்லார் " என்று பின்னாளில் வந்த பாரதி பாடிய போது பாரதத்தின் நிலைமை அவரது காலத்தில் எப்படி இருத்தது என்பதை நாம் உணரமுடிகிறது. ஆனால் இதை விடப் பல மடங்கு எல்லாவகையிலும் கொடிய நிலையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த வேளையில்  புதிய பூபாளமாக, புதியதொரு விடியலாக ஒரு புரட்சி சூரியன் நாடார் குலத்தில் தோன்றி உலகை நல்வழிப்படுத்தியுள்ளது. என்றைக்கு இறைவன் என்கிற ஒருவரை அல்லது இறைமை என்கிற தத்துவதைப் பற்றி மனிதர்கள் சிந்திக்க நினைத்தார்களோ அன்றிலிருந்து இறைவழிபாடு உதயமாயிற்று.          
                     
         காட்டுமிராண்டிகளாக நாகரீகத்தில் முதிராத இனமாக இருந்த நிலைதொட்டு நாகரீக வளர்ச்சி அடைந்த காலம் வரை , ஏன் இன்று வரை கடவுள் வழிபாடு என்பது மனித இனத்தில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்றாகிவிட்டதை யாரும் மறுக்க இயலாது. நாத்திகவாதிகள் என்பவர்கள் கடவுள் மறுப்பாளர்கள். கடவுளைப்பற்றி கவலை கொள்ளாதவர்கள் மட்டுமல்ல, கடவுள் இல்லை என்பதில் உறுதியாக இருப்பவர்கள். .      
         
    பகுத்தறிவாளர்கள் என்பவர்கள் எதனையும் பகுத்து ஆராய்ந்து அறிவின் அடிப்படையில் ஏற்கும் சிந்தனையாளர்கள். பகுத்தறிவாளர்கள் நாத்திகவாதிகளாகவும் இருக்கலாம் அல்லது கடவுளை ஏற்கும் ஆத்திகவாதிகளாகவும் இருக்கலாம். பகுத்தறிவாளர்கள் அனைவரும் நாத்திகர்கள் அல்லர். இன்னும் தெளிவாக புரிய வேண்டுமானால் எல்லோருக்கும் விளங்கவேண்டுமானால் திருவள்ளுவர், திருமூலர், மணிவாசகர், வைகுண்டர், வள்ளலார் போன்ற ஞானியர் பகுத்தறிந்த, ஆத்திகத்தில் பழுத்த இறைநெறியாளர்கள். இதில் மிகவும் ஆபத்தானவர்கள் பகுத்தறியும் திறனில்லாத, எதனையும் சீர்தூக்கிப்பார்த்து உணரும் அறிவில்லாத மூடநம்பிக்கையையே முழுநம்பிக்கையாகக் கொண்டு கடவுள் வழிபாடு என்று எதையாவது செய்பவர்கள். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் கடவுளுக்கு காணிக்கை என்று சொல்லி உயிர்ப்பலியிடும் மனிதர்கள் பகுத்தறிவு இல்லாத விளங்காத ஆத்திகவாதிகள். ஆன்மீகத்தின் அடிப்படை விளங்காத குருட்டு நம்பிக்கையாளர்கள். இவர்களின் குருட்டு நம்பிக்கையைத் தகர்த்து அன்பை, அறிவை அடிப்படையாக இறைவழிபாட்டில் கொண்டுவந்து அதைத் தொடர்ந்து சமுதாயத்தில் மாற்றத்தையும் சமத்துவத்தையும் கொண்டுவந்தவர் வைகுண்டர்.

    சமூகத்தில் மனிதராக பிறந்தோர் அனைவரும் சரிசமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக அரசியல் ரீதியாக போராடியவர்கள் பலர். அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக அறவழியில் போர்தொடுத்து வெற்றிகண்ட மார்ட்டின் லூதர் கிங், தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா போன்றவர்கள் அப்படிப் போராடிய சமூகநீதிப் போராளிகள். இந்தியத் திருநாட்டில் அண்ணல் அம்பேத்கார், அண்ணல் காந்தியடிகள் போன்றோர் சமுதாய ஏற்றத்தாழ்வை நீக்கக் குரல்கொடுத்த சீலர்கள். “உன்னைவிட உயர்ந்தவனும் இல்லை. உன்னைவிடத் தாழ்ந்தவனும் இல்லை அனைவருக்கும் நீ சமமானவே” என்றும் மானமும் அறிவும் மனிதற்கு அழகு என்றும் “ கடவுளை மற மனிதரை நினை “ என்றும் மக்களிடையே ஓயாது எடுத்துச்சொன்ன ஈரோட்டுச் சிங்கம் பகுத்தறிவுப் பகலவன் தந்தைபெரியார் அவர்களும் வைகுண்டர், வள்ளலாருக்குப் பின் வந்த சமூக நீதிக் காவலர் ஆவார்.    

    எவராலும் செய்ய முடியாத செயல்களை பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே எதிர்த்து நின்று போராடி வெற்றிகண்ட சாதனையாளர் திருவள்ளுவரின் கூற்றுப்படி பெரியர். அப்படி பெரியராக, சமூக நீதியை நிலைநாட்ட வந்த போராளியாக, தெளிந்த ஆன்மிகவாதியாக வைகுண்டர் விளங்குகிறார்.

        நாட்டில் நம்மைச் சுற்றி பல கொடுமைகள் நடக்கின்றபோது நமக்கு எதற்கு யாருக்கும் இல்லாத அக்கறை என்று வாழ்வை விதியின்மேல் சுமத்தி வாழும் மனிதர்கள் இடையே மனித சமுதாயத்திற்கு ஏற்பட்ட தீமைகள், கொடுமைகளை, சொல்ல முடியாத துன்பங்களைத் தனியொரு மனிதராகத் துணிந்து நின்று போராடிய வெற்றி வீரரே வைகுண்டர்.

        தன்வழி நடக்கத் துணிந்தவர்களை ஒன்றிணைத்து ஓர் இயக்கம் கண்டு அந்த இயக்கத்திற்கு ‘ அன்புக்கொடி இயக்கம் ‘ என்று அன்றே பெயரிட்டார். அந்த இயக்கம் இன்றுவரை அய்யா வழி பக்தர்களால் அவர்காட்டிய வழிமுறையில் இறைவழிபாட்டு நெறிகளில் அவரது கொள்கைகளை முன்னிறுத்தி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது . தமிழகத்தின் தெற்குப்பகுதிகளில் குறிப்பாக நாகர்கோயில், கன்னியாகுமரி, சாமித்தோப்பு சுற்றியுள்ள பகுதிகளில் அய்யாவழி பக்தர்கள் அதிகமாக இருப்பினும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே இருக்கிறார்கள்.
         தமிழகத்தில் வள்ளலார் பிறப்பதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பாக 1809  அல்லது 1810 ஆம் ஆண்டு பிறந்தவர் வைகுண்டர். 1809ஆம் ஆண்டு மாசி 20ஆம் நாள் பிறந்ததாக பலர் கருத ஒரு சிலர் 1810 ஆம் ஆண்டு பிறந்ததாகவும் சொல்கிறார்கள்.

      

      இவருடைய வாழ்க்கை வரலாற்றை பார்க்கும் போது இவர் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குமரி மாவட்டத்தில் சாமித்தோப்பு என்று தற்போது எல்லோராலும் அழைக்கப்படும் இடத்தில் பிறந்திருக்கிறார். இந்த சாமித்தோப்பு என்னும் இடம் சாஸ்தான்கோவில் விளை என்றும் அழைக்கப்படுகிறது.


      வடவேங்கடம் முதல் தென்குமரி வரை உள்ள தமிழ்கூறும் நல்லுலகில் இந்த புரட்சிவிதை தாழ்த்தப்பட்ட சமூகமாகக் கருதப்பட்ட நாடார் சமூகத்தில் ஞானஒளியாக தோன்றியது. அக்கால கட்டத்தில் தாழ்த்தப்பட்டவைகளாகக் கருதப்பட்ட பல சாதிகளில் பனைமரம் ஏறித் தொழில்புரியும் நாடார் குலமும் இருந்துள்ளது. சாதியின் பெயரால் அன்று சமூகத்தில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அறியும் போது இதயம் கனக்கிறது. சமூக அவலம் அன்று சகித்துக்கொள்ள முடியாத நிலையில் இருந்ததை எண்ணும்போது ரத்தம் கொதிக்கிறது.


   தாழ்த்தப்பட்ட பல சாதிகள் அன்று அனுபவித்த கொடுமைகளை அறியும்போது கண்கள் ரத்தக்கண்ணீர் வடிக்கும். ஒரு சில கொடுமைகளை பார்ப்போம்.


செருப்பு அணியக்கூடாது.
குடை பிடிக்கக்கூடாது.
வேட்டியை முழங்காலுக்கு மேல் தூக்கிக் கட்ட வேண்டும்.
துண்டை தோளில் போடக்கூடாது. அக்குளில் சுருட்டிவைத்துதான் நடக்க வேண்டும்
.
  சிறிய வயதினனாக இருந்தாலும் மேல்சாதிக்காரர்களின் குழந்தைகளையும் கூட ‘ சாமி ‘ என்றே அழைக்க வேண்டும் .
கொத்தடிமைகள் என்ற சொல்லை இன்று அடிமைத்தனமாக இருந்துகொண்டு ஓயாமல் உழைப்பவர்களைச் சுட்டிக்காட்டும் சொல்லாகப் பயன்படுத்துகிறார்கள்.

   ஏழ்மையின் கொடிய கரங்களால் நசுக்கப்பட்டு பசி என்னும் தீ வயிறுகளை எரிக்கப்புறப்படும் வேளையில் அந்தத் தீயிலிருந்து காத்துக்கொள்ள குறிப்பிட்ட தொகைக்கு வருடக்கணக்கில் அடிமைகளாக சிலரிடம், அல்லது தொழிற்சாலையில் வரம்பின்றி பணிசெய்துகிடப்பதே கொத்தடிமை என அழைக்கப்படும்.
                 
        அங்காடித்தெரு’  என்கிற திரைப்படத்தில் வரும் கதாநாயகன், கதாநாயகி அனுபவிக்கும் கொடுமையைவிட வேலைபுரியும் இடத்தில் உழைப்பை உறிஞ்சிக் கொல்லும் மனிதாபிமானமற்ற செயல்கள் அன்றைக்குப் பரவலாக அதிகமாகவே இருந்துள்ளது.

   அடிமைகளாக விலைகொடுத்து வாங்கப்படும் ஆண்களை மற்றும் பெண்களை மாடுகளுடன் கட்டி வயலையே உழுவார்களாம். மாட்டைப்போல், மாட்டைவிடக் கேவலமாக ஆறறிவு படைத்த மனிதர்களே நடத்தப்பட்டுள்ளனர். அதாவது மக்களை மாக்களாக நினைத்து வேலை வாங்கியுள்ளனர். நெஞ்சில் இரக்கம் இல்லாத கொடியவர்கள்.

   ஆங்கிலேய ஆட்சியிடம் இந்தியா அடிமைப்பட்டுக்கிடந்தபோது இந்த தேசம் விடுதலை பெற முதன்முதல் இந்த மண்ணில் ஏற்பட்ட கலகம் சிப்பாய்க் கலகம். இந்த சிப்பாய்க் கலகம் தாய்நாட்டின் விடுதலைக்காக 1857 ஆம் ஆண்டு நடந்தது. 
   
   ஆங்கிலேயர்கள் இந்தியர்களை அடிமைப்படுத்தி ஆளுகிறார்கள் என்று அரசியல் விடுதலைக்குப் போராடிய காலகட்டத்தில் இந்தியாவில் சிலரை இந்தியரே சாதியின் பெயராலும், குலத்தின் பெயராலும், வருணத்தின் பெயராலும் வதைத்த நிலை கண்டும் போராடும் எண்ணமின்றியேபெரும்பாலானோர்கள்இருந்துள்ளனர்.  


    வைகுண்டரைப் போல், வள்ளலாரைப்போல் அம்பேத்கரைப்போல் ஒரு சிலரே சமுதாய விடுதலைக்கு குரல் கொடுத்துள்ளனர். அடிமைப்பட்ட இந்தியாவை பிறநாட்டவரிடம் இருந்து மீட்பதைவிட அடிமைப்பட்டுக்கிடந்த மக்களை சொந்த நாட்டவரிடம் இருந்து மீட்பது மிக முக்கியம் என்று ஏனோ பலர் உணராமல் இருந்துள்ளனர். 
          
   “ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் “ என்கிறது நமது திருக்குறள். ஈராயிரம்    ஆண்டுகளுக்கு முன்பாகவே பிறப்பால் ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடாது என்கிறார் வள்ளுவர்.
   “ ஒன்றே குலம் ஒருவனே தேவன் “ என்பது திருமூலரின் முழக்கம். அனால் வழக்கத்தில் பல குலம் மட்டுமல்ல பலநூறு கணக்கில் கடவுள்கள்.
 சாதியும் மதமும் சமயமும் பொய்யென
  ஆதியில் உணர்த்திய  அருட்பெருஞ்சோதி “
என்று அருட் பெருஞ்ஜோதி அகவலில் வள்ளலார் பாடுகிறார்.

    அனால் வழக்கில் உயர்சாதிக்காரர்கள் வசிக்கும் தெருக்களில் நடக்கக் கூட சில பிரிவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
         
    பொதுக்கிணறு, குளம் போன்றவற்றை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாழ்வியல் உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்ட நிலையில் அக்காலத்தில் ஒரு சில பிரிவினர் வாழ்ந்து இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருந்தனர்.

    நல்ல உடைகளைக்கூட உடுத்தக்கூடாது. தலைமுடியை எண்ணெய் தடவி சீவிக்கொள்ளவும் கூடாது. நல்ல இடத்தில் வசிக்கவும் கூடாது என்று வாழ்வின் எந்த நிலையிலும் அமுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு வேதனை உணர்வோடு வாழ்ந்து இருந்துள்ளனர்.

    இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்ற கொடுமை என்னவெனில் தாழ்த்தப்பட்ட மக்களைக் கேரளத்து நம்பூதிரிகள் நரபலி கூட கொடுத்துள்ளனர் என்கிற செய்தியாகும்.


வரிக்கொடுமை:

    திருவிதாங்கூர்  சமஸ்தானத்திற்கு உட்பட்ட இன்றைய கேரளாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய தென் தமிழகத்தில் அன்றைக்கு பல  வரிக்கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர் தாழ்த்தப்பட்ட நசுக்கப்பட்ட மக்கள். 

    தொட்டதற்கெல்லாம், எதற்கெடுத்தாலும் வரிமயம் தான். மூச்சுவிட மட்டும்தான் வரியில்லை. மற்ற அனைத்திற்கும் வரி, வரி. 16 வயது முதல் 60  வயது வரை எல்லா ஆண்களும் தலைவரி செலுத்த வேண்டும். தலை இருந்து நடமாடும் பரிதாபத்திற்குரிய மனிதர்கள் தங்கள் தலைக்கு செலுத்தும் வரி. தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிற் கருவிகளை வைத்துக்கொள்ளவும் வரி. வீடுகளில் கூரை மாற்றினால் கூரைவரி. தாடிமீசை வளர்த்தால் முடிவரி செலுத்த வேண்டும்.  
                     
    மனுமுறை கண்ட வாசகத்தில் வள்ளலார் “ நல்லோர் மனத்தை நடுங்க செய்தேனோ? “ என்று ஆரம்பித்து வரிசையாக பாவச்செயல்கள் பலவற்றைச் சொல்லிவரும் போது “ வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ? “ என்பார். கூலித்தொழிலாளியிடம் வேலை வாங்கிவிட்டு கூலி கொடுத்துப் பின்பு அந்தக் கூலியிலேயும் ஒரு பகுதியை வரி என்று வாங்கி கொட்டமடித்து கோலோச்சியுள்ளனர் சில ஆதிக்கச் சக்திகள். 

    வரி செலுத்த இயலாதவர்களுக்கு கடுமையான தண்டனையும் உண்டு. யூதர்களை ஹிட்லர் ஜெர்மனியில் செய்த கொடுமைகளைப்போல் இந்தியாவிலும் நடந்துள்ளது பல கொடுமைகள். முதுகில் கல்லைச்சுமத்தி கடும் வெயிலில் நிற்க வைப்பது, சிறையில் தள்ளி சித்ரவதை செய்து மகிழ்வது, இரும்புக்கம்பியை பழுக்கக்காய்ச்சி காதில் செருகுவது, மரத்தில் தலைகிழே கட்டித்தொங்கவிட்டு அடிப்பது, இப்படி இன்றைய திரைப்படங்களில் வரும் புத்தி பேதலித்த வில்லன்கள் செய்கின்ற அட்டகாசங்களை அன்றைக்கு அப்பாவி மக்களிடம் நிகழ்த்தியுள்ளனர்.
    அய்யா வைகுண்டர் பிறந்த நாடார் குலத்து மக்கள் பனை ஏறப்பயன்படுத்தும் ஏணி, காலில் போட்டுக்கொண்டு ஏறும் தலைநார் முதலியவற்றுக்கும் வரிகள் உண்டு. ஆண்களுக்கு இத்தகைய கொடுமைகள் எனில் பெண்களுக்கோ வேறு வகையில் வேதனைகள். அவர்கள் பாலியல் பலாத்காரம், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டுள்ளனர். தாலி முதலிய ஆபரணங்கள் அணிய வரி, நல்ல ஆடைகளை உடுத்தவும் வரி என்று வரிச்சுமையுடன் பெண்கள் மார்பகங்களை மூடி ஆடை அணிய தடையும் இருந்துள்ளது.

    16 முதல் 35  வயது வரை உள்ள பெண்கள் கட்டாயம் முலைவரி செலுத்த வேண்டும். இல்லாவிடில் மரத்தில் கட்டிவைத்து உதைப்பார்கள். அடிப்பார்கள். இப்படி நிறைய கொடுமைகளை அடுக்கிகொண்டே போகலாம்.  

                    கொலை வாளினை எடடா – மிகுக்
                              கொடியோர் செயல் அறவே:
                         குகைவாழ் ஒரு புலியே – உயர்
                              குணமேவிய தமிழா, “                                            
    
    என்று பாடினான் புரட்சிக்கவிஞன் பாரதிதாசன் பின்னாளில், அப்படி கொடுமைகள் இழைத்தவர்களை கொலைவாள் கொண்டு வெட்டினாலும் தவறில்லை. ஆனாலும் எப்படி செய்ய முடியும்? ஆண்டாண்டு காலமாய் அடிமைப்பட்டு அடிமைப்பட்டு பயஉணர்விலேயே வாழ்ந்தவர்கள் எப்படி     எதிர்க்கத்துணிவார்கள்? போராட நினைப்பார்கள்?

 “ தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை
   தவறிக்கெட்டு பாழ்பட்டு நின்றதாமோர் 
பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா “ என்று ஆங்கிலேயரிடம் அடிமைபட்டுக்கிடந்த பாரத தேசத்து மக்களை மீட்ட காந்தியின் போராட்டம் குறித்து பாடினான் பாரதி. அதைப்போலவே உயர்சாதிக்கார ஆணவம், திமிர் பிடித்த கூட்டத்தினரிடம் அகப்பட்டு அல்லல்பட்டு அவதிப்பட்ட இந்த அப்பாவி மக்களைக் கண்டு நெஞ்சுபொறுக்க முடியாமல் போராடத் துணிந்தவரே வைகுண்டர்.

    தன்னைச் சார்ந்த மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மற்ற சமூகத்தினருக்கும் நடந்த கொடுமைகளைக் கண்டு பொங்கி எழுந்து மிகப்பெரிய சமுதாய மாற்றத்தை விளைவித்தவர் வைகுண்டர். வரலாற்றை நன்கு படித்து உள்ள சிலரே வைகுண்டரை மறந்திருப்பது பெரும் குறையே.

    வைகுண்டரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்த போது இந்த புரட்சி ஆன்மிகச் சிந்தனையாளர், சமுதாயச் சீர்திருத்தவாதி குறித்து நாமும் ஒரு நூல் செய்ய வேண்டும் என்று எழுந்த ஆவலின் விளைவே இந்நூல்.
                  
    வைகுண்டரைப் பற்றி படிப்பதற்கு முன்பு வள்ளலாரையும் பெரியாரையும் படித்து வைத்திருந்தேன். 1999 ஆம் ஆண்டு “ வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு “ என்கிற ம.பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய நூல்தான் எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம். தமிழ் மீது இயற்கையாகவே பற்றுடைய எனக்கு நல்ல தமிழ் நூல்கள் நேரம் கிடைக்கும் போது படிக்கும் வழக்கம் உண்டு. அப்படி படித்ததுதான் இந்த “ வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு” என்கிற நூலும். அந்த புத்தகத்தை படித்த பிறகு வள்ளலாரின் சமுதாய, ஆன்மிக விடுதலைக்கான போராட்டத்தைக் கண்டு வியந்தேன். அவரது புரட்சிகரமான சிந்தனைகள் என்னை அவர்பால் ஈர்த்தது எனலாம்.

    வள்ளலாரின் அருட்பாவில் திளைத்து ஆனந்தம் அடைந்தேன். பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் அவருடைய சமுதாயப்புரட்சியை கண்டு வியந்தேன். வெள்ளாடைத் துறவியின் அமைதிப்புரட்சி, ஆன்மிகப்புரட்சி கண்டு அதிசயித்தேன் எனலாம்.
    
     ஓர் இறைக்கொள்கை, அருளும், அன்பும், அறிவும் தெய்வம்: கருணையே கடவுளை அடைய அடிப்படைப் பண்பு, ஒளி வழிபாடு, கடவுளை அவரவர் உள்ளத்தில் அனுபவத்தில் சோதியாகக் காண்பது, பசித்தவர்களின் பசிப்பிணியை நீக்கும் ஜீவகாருண்யம், உயிர்க்கொலை தவிர்த்தல், பலியிடுதல் தவிர்த்தல், உயிர்க்கு இதம்புரிதல், சாதி, சமய, குல, வருண வேறுபாடுகள் இல்லாத சமத்துவ சமுதாயம், கண்மூடித்தனமான மூடநம்பிக்கை எதிர்ப்பு, சடங்குகளைப் புறந்தள்ளிய அகம் நோக்கிய வழிபாடு, இறந்தவர்களுக்கு சமாதிவைத்தல், ஆன்மநேய ஒருமைப்பாட்டுணர்வு முதலியன வள்ளலாரின் மிக முக்கிய கொள்கைகள்எனலாம்.                                                 

     சற்றேறக்குறைய இதே சிந்தனைகளை, செயல்களை வள்ளலாருக்கு முன்பாக ஒருவர் தமிழகத்தின் தென்கோடியில் மக்களிடையே பரப்பிப் புரட்சி செய்துள்ளார். அதிலே வெற்றியையும் காண்கிறார் எனில் அது அய்யா வைகுண்டரே.

     வள்ளலார் அளவுக்கு தமிழக மக்களால் அறியப்படாதவர். ஆனால் வள்ளலாரைப் போன்றே சமுதாய, ஆன்மிக சீர்திருத்தவாதி போரட்ட குணம்  கொண்ட புனிதர் இவர் தென்தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக நாடார்கள் மத்தியில் மட்டும் அறிமுகம் ஆகியிருப்பதும், ஏனைய தமிழகத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரியாமலிருப்பதும் பெரும் குறையே.
     இன்று பொதுவாகவே சில புரட்சியாளர்களை, சிந்தனையாளர்களை, நாட்டுக்கும், மக்களுக்கும் உழைத்த உத்தமர்களை குறிப்பிட்ட மக்கள் மட்டும் போற்றுவதும், விழா எடுப்பதும் தமிழகம் இன்னும் முன்னேறாமல் இருப்பதின் அறிகுறி. நான் வெளிப்படையாகவே சொல்வதால் சிலர் வேதனையடையலாம். இருந்தும் சொல்லிவிடுகிறேன். 
                
     அம்பேத்கர் என்ற புரட்சியாளர் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், இந்திய விடுதலைக்காகவும் போராடிய புரட்சி சிந்தனையாளர்: போராளி: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க மிக முக்கிய பங்கு வகித்த பேரறிஞர். உழைப்பாளி: படிப்பாளி: அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உண்டு. ஆனாலும் இன்று தாழ்த்தப்பட்ட மக்களால் மட்டுமே பொதுவாக கொண்டாடப்படுகிறார்: போற்றப்ப
டுகிறார். அவருடைய பிறந்த நாள், நினைவு நாளில் இந்திய அரசும் , தமிழக அரசும் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்தாலும் இந்தியத் திருநாட்டின் மக்கள் அனைவரும் அவரது உழைப்பை, தொண்டை, தியாகத்தை நினைத்துப்போற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்.

     அதைப்போல கர்மவீரர் காமராஜரை நாடார்களைத் தாண்டி அனைவரும் ஏற்றுப் போற்றுதல் அவசியம். கல்விக்கண் திறந்த காமராஜரை, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்ட படிக்காத மேதையை, பல அணைக்கட்டுகள் கட்டி நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்திய கறைபடியாத கண்ணியவானை நாட்டு மக்கள் அனைவரும் நினைக்க வேண்டும்.

     அதைப் போலவே இந்திய சுதந்திரப் போரில் சுதேசிக் கப்பல் விட்ட விடுதலை வீரர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யை சோழியபிள்ளைமார்கள் மட்டும் கொண்டாடாமல் அனைவரும் கொண்டாட வேண்டும். நாட்டுக்கு உழைத்த வல்லவர்கள் நாட்டுமக்கள் அனைவருக்குமே சொந்தமானவர்கள். இந்த நினைப்பு ஒவ்வொரு குடிமகன் நினைவிலும் என்றும் இருப்பின் நாடு விரைந்து முன்னேறும். சாதிப்பிரிவினைகள், சாதிச் சண்டைகள் ஒழியும்.

         
           அதைப்போலவே வைகுண்டரின் பெருமைகளை அனைவரும் அறிய வேண்டியே இந்த நூல் சிறிய அளவில் உருவாகியுள்ளது. ஏற்கனவே அய்யா வைகுண்டரைப் பற்றிய பல நூல்கள் வெளிவந்து இருப்பினும் மருத்துவனாகிய என் எண்ணத்தில், தமிழ்பற்று கொண்ட என் உள்ளத்தில், தோன்றிய எனது கருத்துக்களை ஒரு நூலாக செய்வதில் எனக்குப் பெருமை: வள்ளலார் குறித்துப் பல்வேறு காலகட்டங்களில் நூற்றுக்கணக்கில் நூல்கள் வெளிவந்துவிட்டன. வள்ளலார் அருளிய திருஅருட்பாவை ஆய்வு செய்தும் அவருடைய சுத்த சன்மார்க்கத்தை, தத்துவங்களை ஆய்வு செய்தும் பலர் முனைவர் பட்டங்களைப் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து பெற்றுள்ளனர். வள்ளலாருக்கு வெளிவந்த அளவிற்கு வைகுண்டருக்கு நூல்கள் வெளிவரவில்லை. மேலும் வள்ளலார் வாழ்க்கை வரலாறு குறித்துக் கூடுமானவரை தமிழ் படிப்பவர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும் என்கிற காரணத்தால் வைகுண்டரின் வாழ்க்கை வரலாற்றை இதில் அடுத்துக் காணலாம்.                                   

    
                       

      வைகுண்டர் வரலாறு - (இரண்டாம் 
                   அத்தியாயம்)

                  
                 
   
    


    இந்திய திருநாட்டின் தென்கோடியில் குமரிமுனை ஒட்டி உள்ள சாமித்தோப்பு என்னும் ஊரே வைகுண்டர் அவதரித்த ஊர். பொன்னுநாடார் என்னும் பனைமரம் ஏறும் தொழிலாளிக்கும் வெயிலாள் என்னும் நற்றமிழ் நங்கைக்கும் சாமித்தோப்பில் 1809 ஆம் ஆண்டு திருமகனாகப் பிறந்தார். 


    பொன்னு நாடார் ஓங்கி உலகளந்த உத்தமனாம் திருமாலின் தீவிரமான பக்தர். அதே காரணத்தால் தனக்கு பிறந்த ஆண் பிள்ளைக்கு ‘ முடி சூடும் பெருமாள் ‘ என்றுப் பெயரிட்டார். தனது பிள்ளையின் பெயரை ‘ முடி சூடும் பெருமாள் ‘ என்று பிறப்புப் பதிவேட்டில் பதிவு செய்யும் போது ஒரு சங்கடத்தை இடைஞ்சலை அனுபவிக்க நேரிட்டது. அழகான தமிழ்ப்பெயரை அதுவும் திருமாலின் பெயரைத்தாங்கிய பெயரை எப்படித் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த தன் பிள்ளைக்கு சூட்டலாம் எனக்கூறி  அரசு அதிகாரிகள் மறுத்ததோடு பெயரை மாற்றச் சொல்லிக் கட்டாயப்படுத்தியுள்ளனர். அப்படி மாற்றவில்லையெனில் அரசகுற்றம் என மிரட்டினர். இதனால் மிரண்டு போன பொன்னுநாடார் தன் பிள்ளைக்கு ‘ முத்துக்குட்டி ‘ என்ற பெயரை வைத்தார். 


    சிறுவயதிலேயே முத்துக்குட்டி பனை ஏறப் பழகத்தொடங்கினார். அவர் தந்தை முத்துக்குட்டியை ஒரு திண்ணைப் பள்ளியில் சேர்த்துவிட்டார்.


    முத்துக்குட்டியோ சிறுவயதிலேயே கருணை உள்ளம் கொண்டவராக விளங்கினார். நீதி போதனை வகுப்புகளில் நாட்டம் செலுத்தினார். பிறர்படும் துன்பங்கள் கொடுமைகள் கண்டுர் வருந்தத் தொடங்கினார். ஆன்மிக ஈடுபாடு அரும்பத் துவங்கியது. அனைத்து தரப்பு மக்களிடமும் அன்பாக பழகத் தொடங்கினார். திருமாலின் மேல் பற்று வைத்தார்.               
                      
    இளம் வயதிலேயே கருணையுள்ளம் கொண்ட முத்துக்குட்டி தம்மைச் சுற்றியிருப்போர் படும் துன்பங்கள் கண்டு வருந்தினார்.


“ அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்
  தன்நோய் போல் போற்றாக் கடை “

ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
  செத்தாருள் வைக்கப் படும் “

என்று அறநூலாம் திருக்குறள் கூறுகிறது. திருக்குறள் காட்டிய இந்த உயர்ந்த பண்பு பிறர் துன்பம் கண்டு வாடும் பண்பு முத்துக்குட்டிக்கு இயற்கையாகவே இளமையிலேயே இருந்திருக்கிறது.
                       
    குறிப்பாக பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் கொடுமைகளையும் கண்டு மனம் புழுங்கினார். மூடநம்பிக்கையுள்ள மக்கள் கணவனை இழந்த கைம்பெண்களுக்குத் தந்த துன்பங்கள் கண்டு வேதனைப்பட்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களின் பிறப்புக் குறித்து ஏளனம் பேசிய கூட்டத்தைக் கண்டு நொந்தார்.
                   
    தனது சமுதாய மக்களின் அவலங்களைப் போக்க  ஒட்டுமொத்த நசுக்கப்பட்ட இனத்தவரை ஒன்றுதிரட்டி எதிர்ப்பைத் தெரிவிக்கத் தருணம் பார்த்துகொண்டிருந்தார்                                 
    
    பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் விதவை மறுமணம் என்பது எண்ணிப்பார்க்க இயலாத ஒன்று. அனால் வைகுண்டரோ கணவனை இழந்த இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ‘ திருமாலை ‘ என்றப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள, தன் வாழ்க்கைத் துணைவியாக்க முடிவெடுத்தார்.

   தனது சுற்றத்தாரின், ஊராரின் எதிர்ப்பை மீறி அப்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இது யாரும் நினைத்துப் பார்க்க இயலாத புரட்சித் திருமணம்.

   வைகுண்டர் அவதரிப்பதற்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு 1774 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் பிறந்த ராஜாராம்மோகன்ராய் என்ற சீர்திருத்தவாதி உடன்கட்டை ஏறுதல் என்றக்கொடியப் பழக்கத்தை எதிர்த்து வெற்றிகண்டார்.கணவனை இழந்த பெண்களைக் கணவன் உடல் எரிந்துகொண்டிருக்கும் சிதையில் தள்ளிக் கணவனின் பிணத்தோடு சேர்த்து சாம்பலாக்கிய மிகப் பயங்கரமான, காட்டுமிராண்டித் தனமான கொடிய வழக்கத்தை எதிர்த்துப் போரிட்டு விதவைகளின் வாழ்வில் துயர் துடைக்கப் போராடினார். வரலாற்றில் இவரது போராட்டம் இன்றளவும் பேசப்படுகிறது.                                                          
  வைகுண்டருக்குப் பின் வந்த வள்ளலாரோ கணவனை இழந்த பெண்கள் தாலியைக் கழற்ற வேண்டாம் என்றார். அவர்கள் தலையில் பூவோடும், நெற்றியிலே பொட்டோடும் சுமங்கலியாகவே இருக்க யாதொரு தடையும் இல்லை என்று சொல்லி 19 ஆம் நூற்றாண்டில் மிகப் பெரும் புரட்சி செய்தார். 


    



       
     “ கைம்மை தவிர்த்து மங்கலம் அளித்த கருணையே “ என்பது வள்ளலாரின் அருட்பா.

      கைம்மைக் கோலம் அகல வேண்டும் என்பது அவரது விழைவு. வள்ளலாருக்குப் பின் வந்த பல சீர்திருத்தப் புரட்சியாளர்கள் விதவை மறுமணத்தை ஆதரித்தனர்.

      தந்தை பெரியார் தமது குடும்பத்திலேயே இளம் வயதில் கணவனை இழந்த சிறுவயது பெண்ணிற்கு மறுமணம் செய்யத் துணை நின்று செய்து முடித்ததாக அவரது புரட்சி வரலாறு காட்டுகிறது.

     தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் தயாராகி வெளிவந்த பாவேந்தரோ,



                  “ கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே   இங்கு

                                வேரில் பழுத்த பலா
                       
                       மிகக் கொடிய தென்று பட்டதண்ணே  

                                 குளிர் வடிக்கும் வட்ட நிலா

என்று விதவைக்கோலம் அவலநிலையைப் பாட்டில் வடித்துப்பாடினார்.

     பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முத்துக்குட்டி என்று பெயர் வைக்கப்பட்ட வைகுண்டரோ தந்து திருமணத்தின் மூலம் செயற்கரிய செயல் செய்தவரானார்.

     திருமாலையுடன் இல்லறத்தில் ஈடுபட்ட முத்துக்குட்டிக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. திடகாத்திரமான முத்துக்குட்டியின் உடம்பிற்கு திடீரென்று என்ன நோய் என்று அறியப்படாமலேயே மிகவும் மோசமான நிலையை எட்டியது. நடப்பதற்குக் கூட திராணியின்று முத்துக்குட்டி படுக்கையில் கிடக்க ஊரே திருமாலையைத் தூற்றியது. நன்றாக இருந்தவரின் வாழ்க்கையில் புகுந்து விளையாடி அவருக்கு தீர்க்க முடியாத நோயைத் தந்துவிட்டதாக திருமாலையை எல்லோரும் இகழ்ந்தும், பழித்தும் பேசினர். இதனால் திருமாலைமட்டும் மனம் நோகவில்லை. முத்துக்குட்டியின் பெற்றோரான பொன்னுமாடனும், வெயிலாளும் மிகவும் மனம் நொந்தனர்.

     எப்படியாவது முத்துக்குட்டிக்கு ஏற்பட்ட நோய் தீராதா என்கிற மன வேதனையில் குடும்பம் இருந்த வேளையில் திருமால் ஆகிய விஷ்ணு வெயிலாளின் கனவில் தோன்றி “ வரும் மாசித்திருவிழாவிற்கு உன் மகன் முத்துக்குட்டியை திருச்செந்தூருக்குக் கூட்டிவா. அங்கு கடலில் நீராடினால் உன்மகன் குணமடைவான் “ என்று சொன்னதாக வரலாறு சொல்கிறது.

     திருமாலின் சொற்படி முத்துக்குட்டியின் பெற்றோரும், திருமாலை என்னும் பெயர்கொண்ட முத்துக்குட்டியின் மனைவியும் முத்துக்குட்டியை திருச்செந்தூர் கொண்டு செல்ல முடிவெடுத்தனர். வெயிலாளும் திருமாலையும் சேர்ந்து தொட்டில் கட்டி முத்துக்குட்டியை அதில் கிடத்தி தோளில் சுமந்தபடி திருச்செந்தூர் கொண்டு சென்றனர். கண்ணீரோடு வியர்வை சிந்தக் கால்வலிக்கக் காட்டிலும் மேட்டிலும் தூக்கி கொண்டு போன வேளையில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது.
  
     சாமித்தோப்பிலிருந்து திருச்செந்தூர் போகும் வழியில் கூடங்குளத்தில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. பேச்சு மூச்சின்றி தொட்டியில் கிடந்த முத்துக்குட்டி திடீரென்று தொட்டிலைவிட்டு இறங்கி திருச்செந்தூரை நோக்கி ஓடலானார். திருச்செந்தூரை நெருங்கிவிட்ட முத்துக்குட்டி திருச்செந்தூர் கடலைநோக்கி ஓடினார்.

     ஒரு மாசிமகம் அன்று ஆயிரக்கணக்கான மக்கள் கடலில் புனித நீராடிக் கொண்டிருந்த வேளையில் முத்துக்குட்டி கடலில் இறங்கி அப்படியே அமர்ந்து இறைவனை வணங்கினார். கடல் அலையைக் கிழித்த முத்துக்குட்டியின் பேரார்வம் காண்போர் கண்களை வியக்க வைத்தது. திகைத்து நின்ற மக்கள் இந்த அற்புதத்தைக் கண்டு வியந்துநின்றனர். மரணம் முத்தமிட விழைந்த முத்துக்குட்டியை இறைவன் அழைத்து முத்தமிட்டானோ என எண்ணி வெயிலாளும் திருமாலையும் மலைத்துப்போயினர். 

     இந்நிலையில் ஓர் அதிர்ச்சி சம்பவம் நடந்தது. கடல் அலைகளால் உள்ளே இழுத்துச்செல்லப்பட்டார்  முத்துக்குட்டி. தன் அலைக்கரங்களால் கடல் அன்னை முத்துக்குட்டியை தனக்குள்ளே இழுத்துப்போட்டாள். செய்வதறியாது திகைத்து நின்றனர் பெற்றோரும் மற்றோரும். முத்துக்குட்டி உயிரோடு திரும்ப வருவாரா அல்லது வெறும் உடலோடு சடலம் மட்டும் கிடைக்குமா எனத் தேடத்தொடங்கினர். முத்துக்குட்டி குணமானது கண்டு ஆச்சரியத்தால் அதிர்ந்திருந்தவர்களுக்கு அடுத்த கணம் ஏற்பட்ட துயரசம்பவம் இறைவன் தந்த வழியோ அல்லது விதியோ என எண்ணிப்புலம்பினர். பெற்றவயிறான வெயிலாளின் உள்ளமும் உடலும் பற்றி எரிவது போல் இருந்தது அவளுக்கு. சோகத்திலும் தன் மகன் மீண்டும் நலமுடன் திரும்புவான் நம் வருத்தம் மறையும் என காத்திருந்தது வெயிலாளின் உள்ளம். கொண்ட உறுதியில் மனம் தளராத வெயிலாள் மூன்று நாட்கள் கடற்கரையிலேயே காத்திருந்தாள். மூன்றாம் நாள் ஓர் அற்புதம் மீண்டும் நிகழ்ந்தது. சிலுவையில் அறையப்பட்ட  ஏசுபிரான் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தது போலக் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட முத்துக்குட்டி உயிருடன் கடல் பரப்பின் மீதிருந்து வெளிவந்தார். உதயசூரியன் ஒளிக்கதிர்கள் கிழக்கு வானத்தில் வெளிச்ச கீற்றுகளை விரித்துப்பரப்புவதைப்போல் ஒரு புத்தொளியாய் புத்துணர்ச்சி பொங்க புறப்பட்டு வந்தார் முத்துக்குட்டி. அருளாளர்கள் வாழ்வில் அற்புதங்கள் என்பது வியப்பல்ல. வள்ளலார் வாழ்வில் அவர் பிறந்ததில் இருந்து திருக்காப்பிட்டுக்கொண்டு மறையும் வரை அநேக அற்புதங்கள் நடந்தேறின. ஒன்றா.... இரண்டா..... சொல்லுதற்கு எத்தனையோ அற்புதங்கள். அதைப்போல முத்துக்குட்டியான வைகுண்டரின் வாழ்விலும் அற்புதங்கள் பல.

     கடலலையிலிருந்து கம்பீரமாய் வெளிவந்த முத்துக்குட்டியின் சொல்லிலும், செயலிலும், தோற்றத்திலும் பல மாறுதல்கள் தெரிந்தன. இதை இன்னொரு பிறப்பு எனலாம்.

     “ நீ மீண்டும் இன்னொரு பிறப்பு எடுத்தால் ஒழிய இறைவனின் இராச்சியத்தில் நுழைய முடியாது “ என்பார் இயேசு. அதைப்போல இன்னொரு பிறப்பு எடுத்து வந்தார் முத்துக்குட்டி எனலாம். இது ஞானம் கிடைத்த பின்பு உண்டான மற்றொரு பிறப்பு எனலாம். இந்த மறுபிறப்பு செந்தூர் முருகன் தந்த இன்னொரு பிறப்போ? அல்லது திருச்செந்தூருக்கு வரச்சொன்ன திருமால் தந்த மறுபிறப்போ? எதுவாக இருந்தாலும் ஒரு அவதாரம் தமிழகத்தின் தென்கோடியிலே அன்றைய நாட்களில் காலத்தின் தேவைக்கேற்ப நிகழ்ந்திருக்கிறது.

     கடலிலிருந்து வெளிவந்த முத்துக்குட்டியைக் கட்டியணைக்கச் சென்றாள் தாய் வெயிலாள். அனால் மகனோ, “ தாயே இனிமேல் நான் முத்துக்குட்டி இல்லை .......... நான் வைகுண்டன். நான் உனக்கு மட்டும் மகன் இல்லை. மக்களை வதைக்கும் கலி என்ற நீசனை அழிக்கவந்த அவதாரம்” என்று கூற தாயோ பேச்சற்றவளாய் நிலைகுலைந்து நின்றாள். தனது மானுட அவதாரத்தின் நோக்கத்தை அவ்வேளை அனைவருக்கும் விளக்கலானார் முத்துக்குட்டி. அன்று முதல் முத்துக்குட்டி வைகுண்டர் என்று அழைக்கப்பட்டார். 

    திருமாலின் அவதாரமாகவே தன்னைக் கருதிய வைகுண்டர் அவரது முற்பிறப்பையும், தற்போதைய பிறப்பின் நோக்கத்தையும் எடுத்துச்சொன்னார்.

    தேவருலகில் வாழ்ந்த சம்பூர்ண தேவனே திருமாலின் ஆணைக்கிணங்க பூலோகத்தில் மானுட குலத்தில் நாடார் இனத்தில் பிறந்து வைகுண்டராக உயர்ந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த அவதாரத்தின் மூலம் வைகுண்டராக விளங்கிய அய்யா தெய்வநிலைக்கு சமமாக மக்களால் மதிக்கப்பட்டார்.
                              
    தனது 22 வது வயதுவரை முத்துக்குட்டியாக சாதாரண மானிடப்பிறப்பாக விளங்கியவர் ஒரு மாசிமக நாளில் வைகுண்டராக அவதாரம் எடுத்தார். அதனால் ஒவ்வோர் ஆண்டும் மாசிமாதம் மகம் அன்று வைகுண்டரின் அவதாரத் தினம் மக்களால் கொண்டாடப்பட்டு நினைக்கப்படுகிறது. இந்த நாளை 2012 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசும் அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.

    கலிநீசர்கள் என்னும் கொடுமைக்காரர்களிடமிருந்து உலகை மீட்க வைகுண்டர் என்னும் இந்த அவதாரம் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது. அன்றைய மன்னர்கள் தாழ்த்தப்பட்ட 18  சாதியினரைச் சார்ந்தவர்களுக்கு இழைத்த கொடுமைகள் எண்ணிலடங்கா. ஆதிக்க வெறியும் அடக்குமுறை மனப்பான்மையும் கொண்ட அன்றைய அநீதி அரசை ஆண்ட நீதிபிறழ்ந்த மன்னர்களே கலிநீசர்கள் என்று அய்யா வைகுண்டரால் அழைக்கப்பட்டவர்கள். அத்தகைய மன்னருக்குத் துணைபோன அரசு அதிகாரிகள், நம்பூதிரிகள் இவர்கள் கூட அய்யாவின் பார்வையில் கலிநீசர்களே.                                                                          

                            ___________                                                                                        
                              
    வைகுண்டரின் தவமும் போதனைகளும் வள்ளலார் கொள்கைகளும் - ( மூன்றாம் அத்தியாயம் )   

    திருச்செந்தூரில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் வைகுண்டர் வாழ்வை ஆன்மிக உலகின் சிகரத்திற்கு கொண்டு சென்றது எனலாம். அதற்குப் பின்பு அவருடைய போதனைகளைப் பின்பற்றி தாழ்த்தப்பட்ட மக்களினம் அவர் பின்னே நடைபோடத் துவங்கியது எனலாம். தனி மனிதனின் மாற்றமே சமுதாய மாற்றத்தின் துவக்கம் என்பார்கள். தனி மனிதரான வைகுண்டரின் வாழ்க்கை மாற்றம் பக்தி உலகிலும், ஆன்மிக உலகிலும், சமுதாய உலகிலும்  பெரிய மாற்றங்களை கொண்டுவந்தது. திருச்செந்தூரில் ஏற்பட்ட மாற்றத்திற்குப் பிறகு சாமிப்தோப்பு நோக்கி பயணமானவர் வைகுண்டர்.

பூவண்டர்: 

     இவர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மன்னரிடம் பணியாற்றியவர். யாதவர் குலத்தைச் சார்ந்தவர். இவர் சாமித்தோப்பு வந்த வைகுண்டருக்காக ஒரு தென்னந்தோப்பைத் தங்குமிடமாக வழங்கினார். இந்தத் தென்னந்தோப்பில் இருந்த ஒரு மாமரத்தின் அடியில் தன்னுடைய ஆறாண்டுகாலத் தவ வாழ்வைத் தொடங்கினர் வைகுண்டர். 

     புத்தர் ஞானம் பெறும் முன்பு ஆறாண்டுகாலம் தியானத்திலும், தவத்திலும் இருந்ததாக அவர் வரலாறு சொல்லும். ஆறாண்டுகால மிகக் கடினமான தவத்திற்கு பிறகே புத்தருக்கு ஞானம் பிறந்தது. அது சித்தார்த்தன் புத்தராக மீண்டும் பிறப்பெடுத்தது எனலாம். ஒரு வைகாசி பெளர்ணமி அன்று எண்ணங்கள் அற்ற நிலையை எய்திய புத்தரின் மனம் தெள்ளிய வானம் போல் தெரிந்தது. அவர் பெற்றது பரிநிர்வாணம் அல்லது விபாசனா. அதன்பிறகு புத்தரின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் நாடறிந்தது. புத்தர் ஞானம் கைகூட தியானம் மேற்கொண்டதோ போதிமரம் என்னும் அரசமரத்தின் அடியில். 

     சைவ உலகில் பத்தாம் திருமுறையாம் திருமந்திரம் அருளிய திருமூலர் திருவாவடுதுறையில் ஓர் அரசமரத்தின் கீழே ஆண்டுக்கணக்கில் யோக நித்திரையில் இருந்தார். திருமந்திரம் என்னும் தமிழ் ஆகமத்தை ஆண்டுக்கு ஒன்றாக அருளி 3௦௦௦ திருமந்திரங்களை அருளினார் என்பர். 

    ஆழ்வார் திருநகரி என்னும் திருகுருகூரில் புளியமரத்தின் அடியில் யோக நித்திரை புரிந்தவர் நம்மாழ்வார். அதைப்போலவே ஒரு மாமரத்தின் அடியில் ஆறாண்டுகாலம் கடுந்தவம் புரிந்தவர் வைகுண்டர். வைகுண்டர் தவம் புரிந்த சாமித்தோப்பை நோக்கி ஆயிரக்கணக்கில் ஒடுக்கப்பட்ட 18 வகை சாதி மக்கள் படையெடுத்தனர். அவர்கள் வைகுண்டரின் அருளைப்பெற ஆர்வம் கொண்டனர். 

சாட்டு நீட்டோலை மற்றும் திருவாசகம் 

      தவநிலையிலிருந்து வெளிவந்த வைகுண்டர் தன்னருகே ஒருவரை அழைத்து தான் சொல்பவற்றை எழுதிகொள்ளச் சொன்னார். தன்னுடைய மானுடப்பிறப்பின் அவசியம், தன்னுடைய அனுபவம், சொல்லப்போகும் நெறிமுறைகள் என சொல்லத் தொடங்க அவை ஏட்டில் எழுதப்பட்டன. அதுவே சாட்டு நீட்டோலை என அய்யாவின் பக்தர்களால் புனிதமாகக் கருதப்படுகிறது. 18 வகையான தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கு தான் சொல்ல விரும்பியவைகளை தனது பாணியில் சொன்னார். அவைகளை நன்கு கேட்டுக்கொள்ளுங்கள் என்று வலியுறுத்தினார். தன்னுடைய அவதார நோக்கத்தையும், இனி தம்வழிமக்கள் கடைபிடிக்க வேண்டியவைகள் குறித்தும் சொன்னவைகளே திருவாசகம் என அய்யாவழி பக்தர்களால் போற்றப்படுகிறது.

     அய்யாவின் ஆன்மிக சிந்தனைகளையும், மக்களுக்கு வழங்கிய போதனைகளையும் இப்போது சுருக்கமாகக் காண்போம்.

 கடவுளின் பெயரால் காசுபணத்தை அள்ளிக்கொடுத்து வீண் செலவு செய்து விரயம் செய்ய வேண்டாம்.
Ø  அதைப்போல் கடவுள் பெயரைச் சொல்லி பணம் பறிக்கவும் கூடாது.
Ø  பூஜை செய்யும் சடங்குகள் என்றும் சொல்லி பணத்தை வீண் செலவு செய்ய வேண்டாம்.
Ø  கடவுள் என்பது அன்பே. அவர் அன்பு வடிவானவர். அவர் ஒவ்வொருவர் உள்ளும் இருக்கிறார்.
Ø  எல்லோரும் நேர்மையுடன், நீதியுடன் வாழ வேண்டும். நிலத்தில் யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை.
Ø  சக மனிதர்களிடம் மட்டுமின்றி அணைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்தி வாழ வேண்டும். இதுவே இறைவனை அடைய வழி.
Ø  இறைவனை அடைய இல்லறத்தை துறக்க வேண்டியது இல்லை
Ø  முடிந்த வரை தானம், தருமம் செய்ய வேண்டும்.
Ø  எவருக்கும் உதவும் மனப்பான்மை அவசியம்.
Ø  பயனில சொல்லாதே. பொய் சொல்லாதே. ஆடம்பரம் ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதி வாழ்வு வாழக் கற்றுக்கொள்.

அடக்கு முறைக்கு அஞ்சி வாழ்ந்த மக்களிடம் அய்யா உரை நிகழ்த்தும்போது....

Ø  கைகட்டி வாய்பொத்தி அடுத்தவனிடம் அடங்கி வாழும் அடிமை வாழ்வு ஒழிய வேண்டும்.
Ø  “எல்லோரும் ஒற்றுமையுணர்வோடு வாழ வேண்டும்.
Ø  எவர்க்கும் எதற்கும் வரி என்ற பெயரில் பணத்தைக் கொடுக்க வேண்டாம்.
Ø  எவரையும் போற்றித் துதிபாடி வாழவேண்டாம். எவர்க்கும் அஞ்சியும் வாழ வேண்டாம்.

என்கிற புரட்சிகருத்துகளை வீறுகொண்டவராக நிகழ்த்தி மக்கள் மனங்களில் மாற்றத்திற்க்கு வழிவகுத்தார். 
       அய்யாவின் போதனைகளில் ஆன்மநேயரும், மனிதநேயமும் வலியுறுத்தி சொல்லப்பட்டது. 
  “வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு காலம் தாழ்த்தாமல் உரிய கூலியைக் குறைக்காமல் கொடுக்க வேண்டும்என்றார்.
  சுயமரியாதை உணர்வோடும், தன்மான உணர்வோடும் ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும் என்றும் உரையில் குறிப்பிடுகிறார்.
      “ஆதிக்கச் சாதியினருக்கு பயந்து முழங்காலுக்கு மேலே வேட்டி கட்டாமல் தரையைத் தொடும் அளவுக்கு கட்டிக்கொள்ளவும், அக்குளில் துண்டை மடித்துச் சொருகி வைத்துச் செல்லாமல் அதை தலையில் தலைப்பாகையாக கட்டிக் கொள்ளவும் சொன்னார்.

    அனைவருக்கும் ஜாதி , மத வேறுபாடுகளை கலைந்து ஒருமை உணர்வோடு வாழச் சொன்னார். முத்திரிக்கிணறு என்ற நீர்நிலை ஏற்படுத்தி அனைத்து சாதி மக்களையும் ஒன்றாக ஓரிடத்தில் நீரெடுத்து அருந்தக் கூறினார். காலில் செருப்பு அணிந்து கொள்ளவும் ,வெயிலில் செல்லும் போது குடைபிடித்துக் கொள்ளவும், சுதந்திர உணர்வோடு எங்கும் செல்லவும் தைரியம் ஊட்டினார். பெண்களும் தோளுக்கு சீலை அணிந்து மார்பை மூடிக்கொள்ள சொன்னார். அதற்காகப் போராடவும் தயாரானார்.


         சுருங்கக்கூறின் கண்ணிருந்தும் குருடாகி. காதிருந்தும் செவிடாகிக் கிடந்த மக்களுக்கு, உணர்வு மங்கிக் கிடந்த மக்களுக்கு உதிரத்திலும், உயிரிலும் உணர்வை ஊட்டினார் எனலாம். மனிதனை வாழ வைக்க அய்யாவின் போராட்டம் அந்நாளில் மிக முக்கியமான சமுதாய விடுதலைப் போரட்டமாக விளங்கியது.

மேலும் புலால்உணவை மறுத்து வாழவும்:

தெய்வத்தின் பெயரால் உயிர்க் கொலையும், பலியும் கூடாது.

உயிர்பலி நீக்கவும் வலியுறுத்தினார்.

    இறைவழிபாட்டை எளிதாக்கி கண்ணாடியின் முன் எரிகின்ற விளக்கை வைத்து ஒளி வழிபாட்டிற்கு மக்களைக் கொண்டுவந்தார்.அன்னதானம் முதலான அறப்பணிகளை ஊக்குவித்தார். அய்யா வழியில் இறந்தவர்களை எரிக்காமல் வடக்கு முகமாக இருத்தி திருமுண் நாமமிட்டு விளக்கேற்றி வைப்பர். குழியில் சடலத்தை வைத்து அடக்கம் செய்வார்கள். இறந்தவர்களுக்கு திதி போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது அய்யா வழிக்கு புறம்பானது. கணவனை இழந்த பெண்கள் தாலியை கழற்ற வேண்டாம் என்பதும் இவர் சொல்வது.

வைகுண்டரின் இத்தகைய வாழ்வியல் நெறிமுறைகளைப் படிக்கும் போதும் அறியும் போதும் நமக்கு வள்ளலாரின் கொள்கைகள் நினைவுக்கு வருகின்றன.

வள்ளலாரின் கொள்கைகளை இப்போது பார்ப்போம்.

Ø  கடவுள் ஒருவரே.
Ø  அவரை ஜோதி வடிவில் உண்மை அன்பால் வழிபட வேண்டும்.
Ø  சிறு தெய்வ வழிபாடு கூடாது.
Ø  அத்தெய்வத்தின் பெயரால் உயிர்ப்பலி கூடாது.
Ø  புலால் உண்ணக் கூடாது.
Ø  சாதி, சமயம்,குலம், மதம் முதலிய வேறுபாடுகள் கூடாது.
Ø  எவ்வுயிரையும் தம்உயிர்’போல் நேசிக்கும் ஆன்மநேய ஒருமைப்பாட்டுணர்வு வேண்டும்.
Ø  ஏழைகளின்பசி தவிர்த்தல் ஆகிய ஜீவகாருண்ய ஒழுக்கமே இறை வழிபாடு.
Ø  புராணங்கள், இதிகாசங்களில் லட்சியம் வைக்க வேண்டாம்.
Ø  பூஜைகள், சடங்குகள் சம்பிரதாயங்கள் தவிர்த்து கடவுளை அறிவொளியாக, அன்பொளியாக அகத்தில் காண வேண்டும்.
Ø  கணவனை இழந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம். 
  (தாலியை எடுக்க வேண்டாம்)
Ø  இறந்தவரைக் புதைக்க வேண்டும். எரிக்க வேண்டாம். சமாதி வலியுறுத்தல் என்பது வள்ளலார் சொன்னது. அதாவது சன்மார்க்க அன்பர்கள் உயிரடக்கம் பெற்ற பிறகு அவர்களது உடம்பை நெருப்புக்கு இரையாக்கக் கூடாது. சமாதியில் வைக்க வேண்டும்.
Ø  கருமாதி, திதி முதலிய சடங்குகள் வேண்டாம்.
Ø  எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

என்பவை வள்ளலாரின் கொள்கைகள். இந்தக் கொள்கைகளைப் பார்க்கும்போது வைகுண்டர் வகுத்துத் தந்த கொள்கைகளிடமிருந்து மாறுபடாமல் அதைப் போன்றே உள்ளது. இந்த கொள்கைகளைப் போல இருவரது மார்க்கத்திலும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.


இருவருமே கொடியை வகுத்துத் தந்தனர்.

அன்புக் கொடி இயக்கம் என்பது அய்யா வழி இயக்கம். வைகுண்ட தலைமைப்பதியில் ஒளிவழிபாட்டிற்கு ஒரு நிலையம் உருவாக்கியதைப் போல வடலூரின் வள்ளலார் சத்திய ஞான சபை உருவாக்கினார் எனலாம்.

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப் பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி

என்பது வள்ளலாரின் மகாமந்திரம்.

அய்யா வழியில்...

சிவசிவ சிவசிவ அரகரா அரகரா
சிவசிவ சிவசிவ அரகரா அரகரா

என்கிற மந்திரத்தையே சொல்லி இறந்தவர்களை அடக்கம் செய்வதும், காலை, மாலை இருவேளையும் சொல்வதும் உண்டு.

வள்ளலார் சத்திய தருமச்சாலையை 1867 ஆம் ஆண்டு நிறுவி சாதி, மதம், குலம், கோத்திரம் என்று எந்த வேறுபாடும் காட்டாமல் பசி என்று வந்த அனைவருக்கும் உணவுதந்து பசிப்பணி நீக்கச் சொன்னார். அய்யா வைகுண்டரோ, அன்றைய நாட்களில் பல இடங்களில் சமபந்தி விருந்து நடத்தியுள்ளார். சமதருமக் குடியிருப்புகளை உருவாக்கியுள்ளார். பல இடங்களில் தெய்வநிலையங்களாக நிழல் தாங்கல்களை உருவாக்கி கல்வியறிவு போதித்ததுடன் அங்கெல்லாம் அன்னதானம் செய்வதையும் ஊக்கபடுத்தியுள்ளார். இவ்விரு ஞானியரின் கொள்கை ஒற்றுமையையும்.சீர்திருத்தச் செயல்களையும் அனைவருக்கும் உணர்த்தும் வகையில் எழுதப்பட்டது இந்த நூல்.
    

            சாமித்தோப்பில் பாலபிரஜாபதி அடிகளாரைச் சந்தித்து இந்த நூலை நான் வழங்கியபோது
      
                  ----------------------













            
             
         
                               

                












  

                     
                    

                   
                        

3 comments:

  1. அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் ஜோதி சொருபனாக தோன்றியது எந்த தாய்க்கும் எந்த தந்தைக்கும் என்பதை கூற முடியுமா?
    முடியும் என்றால் 9943868438 என்ற எண்ணில் சொல்லுங்கள்

    ReplyDelete
    Replies
    1. மகாவிஷ்ணுவுக்கும் (ஆதி நாராயணர்) மகாலட்சுமிக்கும் மகன்.

      Delete
  2. மகாவிஷ்ணுவின் அவதாரமே வைகுண்ட அவதாரம். முத்துக்குட்டி இல்லை.

    ReplyDelete